வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்

25.2.13

உள்ளே/ வெளியே -1

                                      செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் என்று கூறுவார்கள் .சேமிப்பின் மகத்துவம் கையில் காலணா காசு இல்லாதபோதுதான் உணர முடிகிறது . செலவழித்தது போக மிஞ்சியதை சேமிப்போம் என்று நினைத் தீர்களானால் எந்த காலத்திலும் சேமிக்க முடியாது .சேமித்தது போக மிஞ்சியதை செலவழித்தால் நீங்களும் ஒரு கோடீஸ்வரன்தான்..சும்மாவா பாடி வைத்திருக்கிறார்கள் 

கைக்கு கைமாறும் பணமே 
உனை கைப்பற்ற நினைக்குது மனமே 
நீ தேடும் போது வருவதுண்டோ 
விட்டு போகும்போது சொல்வதுண்டோ 

சேமிப்பு ஓர் உற்ற நண்பன் 

உள்ளே :

                          நேற்று நண்பர் ஒருவரின் இல்ல விழாவிற்கு சென்றிருந்தேன் ,உண்மையிலே அந்த விழாவிற்கு பெயர் இல்ல விழாதான் .ஏதும் புதிதாக வீடு கட்டியிருக்குறீர்களா? என்று விசாரித்தேன் .இல்லை என்றார் .சுமார் ஐந்தாயிரம் பத்திரிக்கை கொடுத்திருப்பதாக கூறினார் .உறவினர்களின் விசேசங்களுக்கு  செய்த மொய்யை வரவழைத்து வசூலிப்பது தான் விழாவின் முக்கிய நோக்கம் 

ஏங்க உங்க  சொந்தக்கரவுங்க மொய் எழுதுவாங்க ,நீங்க செஞ்சிருப்பீங்க , நா எப்படிங்க மொய் எழுத முடியும் 

யோவ் மொயஎல்லாம் எழுத வேணா ,சும்மா வந்து சாப்பிட்டு போயா 

அப்ப சரி 

மண்டபத்தின் நுழைவுவாயிலில் ,குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர் வரவேற்றார் .அந்த இடத்திலேயே அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க படுகிறது .முதல் வேலையாக 'போய் சாப்பிடுங்க 'என்று அன்போடு உபசரிக்க பட்டேன் .சாப்பாடு கூடத்தில் பதினெட்டு பட்டியும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர் .காதில் தண்டட்டி அணிந்த பாட்டி ஒருவர் எலும்பை கடித்து அனாயசமாக மென்று கொண்டிருந்தார் .ஒருவர் சாப்பிடும் நாற்காலிக்கு பின்னால் நின்று கொள்ளவேண்டும் .அவர் எழுந்தவுடன் மியூசிக்கல் சேரில் அமர்வது  போல அமரவேண்டும் .இது தெரியாமல் ஒரு சிறுவனிடம் ஏமாந்தேன் .

கீழே நடன  நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது .முதல் மரியாதை சிவாஜியாக 'மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல ' என்றார் .நீ தூக்க மாத்திரையும் சேத்து  வாங்கிருக்கணும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டேன் .சுமார் ஐந்து மணிநேரம் இது போன்று நிகழ்ச்சி நடக்குமாம் .வெளியில் வந்தால் நீளமான மேஜை பின்னே ஐந்து பேர் நாற்காலியில் .

ஈச்சம்பட்டியெல்லாம் இங்க வாங்க , உசிலம்பட்டியெல்லாம் அங்கிட்டு போங்க ,ஒருவர் ஏப்பம் விட்டு  கொண்டே ,பத்தாயிரத்தி ஒன்னு ,ஒரு கை மீசையை முறுக்கி கொண்டிருந்தது .எங்கே இவர்களாகவே பாக்கெட்டிற்குள் கையை விட்டு பணத்தை எடுத்து மொய்யாக எழுதிகொள்வார்களோ என்று பயந்து நண்பரிடம் கூட சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்துவிட்டேன்.யோசித்து பார்த்தால் இவர்களுடைய பணம் மொய் என்ற பெயரில் உறவினர்கள் கூட்டத்துக்குளே சுற்றி கொண்டிருக்கும் ,அதுவும் வட்டியில்லா கடனாக .ஐந்தாயிரம் பேராவது கண்டிப்பாக வருவார்கள் என்றார் நண்பர் .தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தால் கூட ,அடங்கொக்க மக்கா அம்பது லட்சம்யா அம்பது லட்சம்

வெளியே :

                    சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்தேன் .ஒன்று 'மயக்கம் என்ன' .  ஜூனியர் விகடனில் வெளியான தொடர் .இரண்டு பாரதி மணியின் 'பலநேரங்களில் பல மனிதர்கள் '.

எஸ்.கே.எஸ் மணியாக இருந்தவர் பாரதி படத்தில் பாரதியாராக நடித்த சாயாஜி சிண்டேவுக்கு தந்தையாக நடித்ததால் பாரதி மணியாக உயர்ந்தவர் .மணிரத்னத்தின் கடல் படத்தில் துவக்க காட்சிகளில் பாதிரியாராக வருபவர் .இவை எல்லா வற்றையும் விட கா.நா.சு வின் மருமகபிள்ளை .மிக அசுவாரஸ்யமாகத்தான் படிக்க தொடங்கினேன் .ஐம்பது ஆண்டு கால டில்லி வாசமும் ,பல மதிப்பு மிக்க மனிதர்களுடனான அனுபவங்களின் கட்டுரை தொகுப்பே இப்புத்தகம் .இவரை பற்றி மதிப்புரைகளில் குறிப்பிட்டது போல உண்மையிலேயே இவர் தகவல் கிடங்குதான் .இன்னும் இவரிடம் வெளிவராத பல தகவல்கள் இருக்கிறது என்று இவரே கூறிகிறார் .இந்த வயதில் திகார் சிறை வாசம் தனக்கு ஒத்து வராது என்பதாலே என்கிறார் .எவ்வித தயக்கமும் இல்லாமல் தான் ஒரு குடியனாக இருந்ததை ஒத்துகொள்கிறார் .இவர் ஒரு மிக சிறந்த நாடக நடிகரும் கூட ,அமரர் சுஜாதா இவரது 'நிகோம்போத் சுடுகாடு ' கட்டுரை பற்றி எப்போதாவுதுதான் இது போன்ற கட்டுரைகள் படிக்க முடிகிறது என்று குறிப்பிடுகிறார் .நாடாண்டவர்களின் மகன்கள் அதிகார மீறலுக்கு ,'காந்தி பாய் தேசாய் ' கட்டுரை ஒரு எடுத்துக்காட்டு .காந்தி பாய் தேசாய் ,மொராஜி தேசாயின் மகன் .மொராஜி ஆண்ட காலத்தில் இவர் விரும்பியருந்தும் விஸ்கியை தடை செய்ய முயன்றாராம் . அதை இவ்வாறு குறிப்பிடுகிறார்

"you drink your pisky, let me drink my whisky; cheers"
ரசனையான குடிகாரர் ,அன்னை தெரசாவுடனான அனுபவங்கள் ,சுஜாதா சில நினைவலைகள் ,பூர்ணம் விஸ்வனாதனுடனான  அனுபவங்கள் .சர்தாஜிகள் பற்றிய கட்டுரை முக்கியமானவை .அதிலும் குஷ்வந்தசிங் ' குறும்பான பேச்சை ' போகிற போக்கில் பதிவு செய்துவிட்டு போகிறார்
                                                                                   

ஒரு மனிதருக்கு எப்படி இவ்வளவு அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்று ஆச்சிரியபட்டுகொண்டிருக்கிறேன் .எது எப்படியோ தமிழ் சூழலில் மிக முக்கியமாக படிக்கப்பட வேண்டிய புத்தகம்


நா.மணிவண்ணன் 
Read More

© 2011 நா.மணிவண்ணன், AllRightsReserved.

Designed by ScreenWritersArena